எங்கேயோ இருக்கிறீர்கள்..? எனக்குத்தெரியும் நீங்கள் எங்கேயோ இருக்கிறீர்கள் கடைசியாக நீங்கள் வேலையால் வந்து கழற்றிப்போட்ட ஆடைகள் உங்களில் நான் கிறங்கும் அதே வியர்வை மணத்துடன் கொழுக்கியில் தொங்கிக்கொண்டு இருக்கிறது..
அன்றிரவு அவர்கள் உங்களை அடித்து இழுத்துச்சென்ற போது நான்கதறிய கதறல் இப்போது ஒவ்வொரு வீடாய் கேட்கத்தொடங்கி இருக்கிறது
காலையில் எழுந்து அப்பா
எங்கே என மகன் கேட்டான் எப்படித்தான் காணாமல் போனமை பற்றி அவனுக்கு நான் விளக்க முடியும்..? வருடங்கள் உருண்டோடிவிட்டன காலமும் மனிதர்களும் எதுவுமே நடந்து விடாததுபோல் போய்க்கொண்டிருக்கிறார்கள்...!
உங்கள் நெஞ்சில் இருந்து துள்ளுவது போலவே நேற்றைக்கு மாலையும் என் மார்பில் குதித்தபடி அப்பா புராணம் பாடிக்கொண்டிருந்தான் மகன், பொறுக்க முடியாமையின்
விழிம்பிலும் காலநீட்சியின் விரக்தியிலும் அப்பா அப்புச்சாமியிடம் போய்விட்டார் எனச்சொல்ல வாயெடுப்பேன் ஆனால் ஏதோ ஒன்று உள்ளிருந்து தடுக்கும்
எத்தனையோ இரவுகள் தலையணையைக்கட்டி அணைப்பதும் வெறுங்காற்றில் காலைத்தூக்கிப்போடுவதுமாக கழிந்துவிட்டன.. ஜோசியர்கள் சொன்னபடி ஈசானமூலை, அக்கினிமூலை என அத்தனை திசைகளிலும்
உள்ள இராணுவமுகாம்களிலும், நடுநிசியின் நாய்க்குரைப்பு ஓசைகளைக்கிழித்தபடி வாசலில் நின்று செல்லும் வாகனங்களின் பின்னாலும் பல ஆண்டுகளாக ஓடிக்களைத்து விட்டேன், உண்மையில் உங்களைத்தேடி நான் ஏறாத வாசல்கள் இல்லை சுவர்க்க வாசலைத்தவிர,
நான் உணர்ந்து கொள்கிறேன் என்னுடைய இந்தப்பிறப்பின் வாழ்க்கைக்காலத்தில் இனி ஒருபோதும் உங்களை நான்
காணப்போவதில்லை.. ஆனாலும் இப்போது கூட உள் மனசு சொல்கிறது நீங்கள் எங்கேயோ இருக்கிறீர்கள்...?
காற்று உருட்டிக் கொண்டிருக்கிறது. அதன் பார்வையில் படும் எல்லாவற்றையும்! உன் பார்வையைப் போல.. என் மனதை நீயும் உருட்டிக் கொண்டிருக்கிறாய்..
என் வார்த்தைகள் சொல்லத் தவறியதை என் பார்வை உனக்கு உணர்த்திக் கொண்டுதான் இருக்கிறது. புரிதலுக்கும் அறிதலுக்கும் இடையிலான கால இடைவெளி இப்போது நமக்குள்ளும்.. தன் ரணங்களைத் தானே நக்கிக் கொள்ளும் குட்டிப் பூனையாய் என் மனசும்.. காயங்களை ஆற்றிக் கொண்டு உன் பதிலுக்காய்க் காத்திருப்பதில் என் காலங்கள்..
யாருக்கும்பரிசளிக்கமுடியாது
காய்ந்தபூக்களை யாருக்கும்பரிசளிக்க முடியாது என் உறைந்துபோன முத்தத்தைப்போல
உங்கள் கவிதைகளை எமக்கு அனுப்புங்கள் நாம் அவைகைள நாம் தோரனமாக்கி இங்கே கட்டிதொங்கவிடுவோம்